இதுதான் வாழ்க்கை
இது தானடா வாழ்க்கை…!
என்னடா வாழ்க்கை இது..? – நிறைய விமர்சங்கள் வந்தன… எல்லாமே Gtalk ல் தான். அது ஏனோ நம் மக்களுக்கு பொது இடங்களில் விமர்சனம் செய்வதில் விருப்பமில்லை போலும். அதிகமாக வந்த விமர்சனங்கள்…
1) வாழ்க்கையை நீ தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறாய்… 2) படிக்க மிகவும் பெரியதாக இருக்கிறது. 3) இது பருவக் கோளாறு, திருமணம் முடிந்தால் சரியாகிவிடும். கிட்டத் தட்ட எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தால், இவை எல்லாம் சரி தான் போல.
ஆமாம் வாழ்க்கை என்பதே ஒரு அற்புதம் தான். (அரிது.. அரிது.. எனத் தொடங்கும் அவ்வைப் பாட்டியின் பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது). உண்மைதான், மனிதனைப் பிறந்து அதில் எந்தக் குறை இன்றி நன்றாக இருப்பதே ஒரு பாக்கியம் தான். கண்ணைக் கட்டிக் கொண்டோ, பேசாமலோ, நடக்காமலோ ஒரே ஒரு நாள் மட்டும், முழுவதும் உங்களால் இருக்க முடியுமா? கண்டிப்பாய் என்னால் முடியாது.
பிறக்கிறோம், 10 வயது வரை வாயில் அதிகமாக பேசும் மொழி புன்னகை தான். புன்னகையிலும் சிரிப்பிலும் வளர்கிறோம். பின்னர் பள்ளி…! படித்துக் கொண்டு இருந்த ஞாபகங்களை விட, பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்த ஞாபகங்கள் தான் அதிகம். சந்தோசமான பொழுதுகள். பள்ளி முடிந்ததும் கல்லூரி, சொல்லவே தேவை இல்லை. கல்லூரி நாட்களை, ரசித்துப் பார்க்காத, ருசித்துப் பார்க்காத, மனிதர்கள் யாரும் உண்டா? நிறைய பேரிடம் இன்று வரை கேட்டால், வாழ்க்கையில் சந்தோசமான பொழுதுகளே என் கல்லூரி நாட்கள் தான் என்பார்கள்.
பின்னர் வேலைக்கு சேர்வது… மனிதன் தன்னாலும் சம்பாதிக்க முடியும் என்று உணரும் நாட்களே இது தான். முதல் மாத சம்பளம் வாங்கும் பொழுது, மனிதன் படும் சந்தோஷங்களுக்கு அளவே கிடையாது. சம்பளத்தை எடுத்து தாயிடம் நீட்டும் போது, நானும் பெரியவன் ஆகிவிட்டேன் என்றொரு உள்ளுணர்வு. தாய்க்கோ என் பிள்ளை இவன், மிகப் பெரிய ஆளாக வருவான் என்றொரு உள்ளுணர்வு. பணத்தை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் பல இடங்களில், சந்தோஷம் வரக் காரணமே பணம் தான்.
எல்லோருக்கும் அவரது தந்தை தான் தனது முதல் ஹீரோ. அவரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைக்க முயற்சிப்போம் சிறு வயதில்… தாய் என்ற ஒரு அற்புத பந்தத்தையும் அறிமுகப் படுத்தி… அதை உணரச் செய்வதும் வாழ்கை தான்…! பின்னர் துணை. ஆணாகட்டும், பெண்ணாகட்டும், தனக்கென்று ஒரு துணை, நீங்கள் என்ன மொக்கை ஜோக் சொன்னாலும் அதையும் கேட்டு சிரிக்க ஒரு ஆள் உங்கள் அருகே எப்போதும்… புதிதாய் ஒரு உலகை உணர்வீர்கள். அந்த புன்னகை, ஸ்பரிசம், காதல், அன்பு, வம்பு, சண்டை, மன்னிப்பு, கண்ணீர், கோபம், அக்கறை, பாசம், நேசம், கண்டிப்பு, எல்லாவற்றையும் நன்றாக உணர்த்தக் கூடிய ஒரு பந்தம் தான் துணை.
அடுத்து என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் நன்றாக யூகித்து இருப்பீர்கள், ஆமாம், குழந்தை. உங்கள் குழந்தையை முதன் முதலாய் முகம் பார்த்து, தொட்டுப் பார்த்த அனுபவத்தை உங்களால் விவரிக்க முடியுமா? கண்டிப்பாய் முடியாது…! அந்த குழந்தை பார்ப்பதையும், கண் சிமிட்டுவதையும், அழுவதையும், கொட்டாவி விடுவதையும், பார்க்க பார்க்க ஆனந்தம் தான். அதுவரை, யார் யாருக்கோ கடைக்கு சென்று ஏதேதோ வாங்கி இருப்பீர்கள். உங்கள் குழந்தைக்கு, ஓடிச் சென்று cerelac, pumpers வாங்கும் போது தான் நானும் தந்தை ஆகிவிட்டேன். என் குழந்தையை எப்படி வளர்க்கிறேன் பார், என்று உள்ளூர ஒரு பெருமிதம்.
சிறு குழந்தைகள் வளர்வதைப் பார்த்துக் கொண்டு இருப்பதே… ஒரு சுகம் தான். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு விஷயங்களை கற்றுக் கொண்டு செய்யும். அதிலும், முதன் முதலாக சிரிப்பது, நடப்பது, பேசத் தொடங்கி, அம்மா, அப்பா என்று அழைக்கத் தொடங்குவது… நீங்கள் செய்வதை எல்லாம் திரும்பவும் செய்வது… என்று தினந்தோறும் தீபாவளி தான் வீட்டில்.
கட்டுரை நீண்டு கொண்டு போகிறது…! OK முடிந்த வரை சீக்கிரம் முடித்துக் கொள்கிறேன். ஆகவே அன்பர்களே நண்பர்களே, வாழ்கை என்பதே அடுக்கடுக்காய் அற்புதங்களும், மகிழ்வுகளும் நிறைந்த பேழை தான். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். நம்மை விட கண்டிப்பாய் தாழ்ந்தவர்கள், எளியவர்கள், வாழ்வில் நொடித்துப் போனவர்கள் ஏராளம் பேர். அவர்களைப் பார்த்து, நாம் நம் வாழ்கையை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறி, யாருக்கும் தொந்தரவு இன்றி வாழ்ந்தாலே, அதுவே போதுமானது…! (அட போங்க பாஸ்… கடைசி Paragraph சரியான மொக்கை, வேற வழி இல்லை. எப்படியாவது முடிக்கணும்ல…!)
vinoth
August 10, 2011 at 1:45 PM
இது தாண்ட வாழ்கை படித்துவிட்டு வாழ்கையில் விரக்தி வந்துவிட்டது என்று தவறாக எண்ணிவிட்டேன், தவறாக என்ன வேண்டாம் தனி மனிதனின் கோபம் சில தருணங்களில் வாழ்கையின் மீது வெறுப்பு உண்டாக தான் செய்யும் . ஆனால் இதை படிக்கும் போது தெள்ள தெளிவுடன் உணர்ந்து எழுதிருகிங்க கலக்கலா இருக்கு பாஸ்
MdRabeek
October 18, 2011 at 8:20 AM
Anakku un mela konjam doubta erukku machi, Thaniya engayavathu kalyanam panni kudumbam kuttiyuda erukkiyanu…!
M.lukman
June 20, 2012 at 3:29 PM
Innum neraya Ethir pakuren